தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, December 9, 2012

21.12.2012 அன்று உலகம் அழியப் போகிறது! மாயன் கலண்டர் மர்மம்! ஆதாரங்கள் இல்லை! பயப்படாமல் இருங்கள்!


 [ விகடன் ]
எவ்வளவு பெரிய பரபரப்பான  செய்தியை இவ்வளவு சாதாரணமாகச் சொல்கிறீர்களே? என்று குழம்புவர்களுக்காகவே இந்த தகவல். மாயன் கலண்டர் செய்த மாயம்தான் இந்தப் பரபரப்புக்கு அடித்தளம் போட்டிருக்கிறது.
அது என்ன மாயன் கலண்டர்?
கிறிஸ்து பிறப்பதற்கு 2,000 ஆண்டுகளுக்கு முன், மாயா என்றோர் இனம் தென்னமெரிக்காவில் இருந்ததாம். மாயா இனத்தைச் சேர்ந்த​வர்கள் வானவியல் சாஸ்திரங்களிலும், கட்டடக் கலையிலும், கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்தவர்களாக இருந்தனர் என்று ஆராய்ச்சி​யாளர்கள் சொல்கிறார்கள். அதற்கு ஒரே சாட்சிதான் மாயன் கலண்டர்.
தென்னமெரிக்காவில் வாழ்ந்த மாயா சமூகத்து மக்கள் பயன்​படுத்திய காலத்தின் கணக்கு முறைகளைக் கொண்டு இந்தக் கலண்டர் உருவாக்கப்பட்டது.
கி.மு. 3113 தொடங்கி கி.பி. 2012 டிசம்பர் 21-ம் தேதி மயன் காலண்டர் முடிவுக்கு வருகிறது. வான சாஸ்திரங்களைக் கரைத்துக் குடித்த மாயா இனத்தைச் சேர்ந்தவர்கள், 2012-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதியுடன் காலண்டரை முடித்துக் கொள்ள என்ன காரணம்?
அதற்குப் பிறகு இந்த உலகமே இருக்காது என்பதுதான் மாயன் கலண்டர் சொல்லும் இரகசியம்'' என்று சிலர் காரணம் சொல்வதுதான் கலக்க ஆரம்பித்து உள்ளது.
உலகம் அழியப் போகிறது என்பதை வெளிநாட்டு மக்கள் ஆணித்தரமாக நம்புகிறார்கள். அதனால்​தான் தாய்லாந்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், 'என்னிடம் கடன் வாங்கியவர்கள் யாரும் பணத்தைத் திருப்பித்தர வேண்டாம். இருக்கும் வரை எல்லோரும் சந்தோஷமாக இருக்க​லாம்’ என்று அறிவித்திருக்கிறார்.
மலேசியாவில் ஒருவர் தனது சொத்தை விற்றுச் செலவு செய்யத் தொடங்கினாராம். இன்டர்நெட்டில் இதுசம்பந்தமாக ஏராளமான வதந்திகள் உலவ ஆரம்பித்துள்ளன.
இப்போது தமிழ்நாட்டிலும் உலகம் அழியும் வதந்தி ஜுரம் வேகமாகப் பரவுகிறது.
உலகம் அழியப் போகுதாமே...’ - சொந்த பந்தங்கள், நண்பர்களுக்கு இடையில் போன் மூலம் விசாரிப்புகள் நடக்கின்றன. சமூக வலைத்தளங்களில் உலக அழிவைப் பற்றிய விவாதங்கள் சூடுபறக்கின்றன.
நெல்லையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், 'டிசம்பர் 21-ம் தேதியுடன் உலகம் அழியப் போகிறது. அதனால் இனி பாடம் நடத்தப் போவது இல்லை. ஒருவரோடு ஒருவர் பேசி சந்தோஷமாகப் பேசி நாட்களைக் கழிப்போம்.
என்ஜாய் ஸ்டூடன்ட்ஸ்!’ என்று உற்சாகத்தில் குதிக்கிறார்கள் மாணவர்கள். ஒரு பள்ளியில் 'பப்ளிக் எக்ஸாம் கிடையாது. ஜாலியா இரு’ என்று தோழிகளுக்குள் கிண்டல்.
சேலத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பத்தினர், தங்கள் சொந்த பந்தங்களை எல்லாம் ஒரே இடத்துக்கு வரவழைத்து விருந்து கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
எல்லோரும் ஒரே நேரத்தில் சாகப்போறோம். மறுபடியும் நாமெல்லாம் பிறப்போமா... அப்படியே பிறந்தாலும் இந்தச் சொந்தங்கள் தொடருமா?’ என்றெல்லாம் கேட்டு கண்ணீர் மழையில் நனைந்திருக்கிறார்கள்.
கோவை அருகே உள்ள ஒரு தேவாலயத்தில், தாங்கள் செய்த தவறுகளை பாதிரியாரிடம் சொல்லி பாவமன்னிப்பு கேட்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம்.
உங்களுக்கு நிறைவேறாத ஆசைகள் இருந்தால், அதை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். நீங்களும் சந்தோஷமாக இருங்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக இருக்கச் சொல்லுங்கள்’ என்று பல தேவாலயங்களில் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.
உலகம் அழியும் என்று சொல்லப்படுவது குறித்து பிரபல ஜோதிடரான கே.பி.வித்தியாதரனைச் சந்தித்துக் கேட்டோம்.
சனி, ராகு இரண்டும் மக்களுக்குத் தொல்லையை உண்டாக்கக்கூடிய கிரகங்கள். இந்த இரண்டு கிரகங்களும் ஒன்று சேர்வது அபூர்வம். ஆனால் இப்போது சேர்ந்து இருக்கின்றன.
இதனால் பேரழிவுகள் நிச்சயம் இருக்கும். விபத்துகள் அதிக எண்ணிக்கையில் நிகழும். மனசாட்​சிக்கு விரோதமான செயல்கள் நடக்கும்.
2014 ஜூன் மாதம் வரை இந்த இரண்டு கிரகங்களும் ஒன்று சேர்ந்து இருக்கின்றன என்பதால், அதுவரை மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக மேஷம், துலாம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்குதான் இந்தக் கிரக மாற்றம் அதிக அளவிலான பிரச்சினைகளையும் சோதனைகளையும் கொடுக்கும்.
இந்தக் காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகள் அசாதாரண திறமையுடன் இருப்பார்கள். ஆனாலும், குழந்தை​களின் உடல்​நலனில் அக்கறை காட்டு​வது அவசியம்.
மற்றபடி ஒரே நாளில் உலகம் அழியும் என்று சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. நம் ஜோதிடத்திலும் அப்படிக் குறிப்பிடவில்லை என்றார்.
சென்னை வானிலை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ரமணன் என்ன சொல்கிறார்?
2004-ம் ஆண்டு சுனாமி வந்தபோது இறந்தவர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்களுக்குள்தான் இருக்கும். ஒட்டுமொத்த உலகமும் அழிவது என்றால், எப்படிப்பட்ட சுனாமி வரவேண்டும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.
சுனாமியால் பாதிப்பு வருவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. அடுத்து அழிவு என்று பார்த்தால் நில நடுக்கம். அது எப்போது வரும்... எப்படி வரும் என்பது யாருக்குமே தெரியாது.
ஆனாலும் ஒட்டுமொத்த உலகத்தையே அழிக்கும் அளவுக்கு நிலநடுக்கம் வருமா என்பதும் சந்தேகம்தான்.
உலகம் அழியப்போகிறது என்று இதுவரை யாரும் ஆதாரபூர்வமாகச் சொல்லவில்லை.
அதனால் மக்கள் பயப்படாமல் தைரியமாக இருக்கலாம் என்கிறார்.
சாகுற நாள் தெரிஞ்சுட்டா வாழுற நாள் நரகமாகிடும்னு நம்ம ரஜினி சார்  சும்மாவா சொன்னார். கூலா இருங்க மக்களே!

No comments:

Post a Comment