தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 1 செப்டம்பர், 2012

திருமூலர் வரலாறு ( சுருக்கமாக ) !!


திருச்சிற்றம்பலம் !!

சித்தர்களில் முதன்மையானவர். சிவபெருமானிடமும், நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர். அஷ்ட்டமா சித்திகள் அனைத்தும் கைவரப்பெற்றவர். இவர் அகத்தியரிடம் கொண்ட அன்பால் அவருடன் சிலகாலம் தங்குவதற்கு எண்ணி, தான் வாழ்ந்த திருக்கைலையிலிருந்து புறப்பட்டு பொதிகை மலையை அடையும் பொருட்டு தென் திசை நோக்கிச் சென்றார்.

செல்லும் வழியில் திக்கேதாரம், பசுபதி, நேபாளம், அவிமுத்தம் (காசி) விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, த்ருவாலங்காடு, காஞ்சி ஆகிய திருத்தலங்களைத் தரிசித்து ஆங்காங்கே இருந்த சிவயோகிகளைக் கண்டு அளவளாவி மகிழ்ந்தார்.

பிறகு தில்லையில் இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருநடனம் கண்டு மகிழ்ந்த சிவயோகியார், திருவாவடுதுறை இறைவனை வழிபட்டுச் செல்லும் போது காவிரிக் கரையிலுள்ள பொழிவினிடத்தே பசுக் கூட்டங்கள் கதறி அழுவதனைக் கண்டார்.

( இதில் இரண்டு நிகழ்சிகள் கவனிக்கத் தக்கது, ஒன்று திருமூலர் பசுக்கள் அழுவதை அறிந்தவர் ( மண்ணுயிர்கள் என்ன செய்தாலும் சித்தர்களுக்கு தெரியும் ) மற்றொன்று மாடுகள் அழுகின்றன அப்படி எனில் அவற்றிக்கு தெரிகின்றன பிறப்பு இறப்பு அம்ற்றும் பாசம் போன்றவை )

பசுக்களின் துயர்கண்ட சிவயோகியார்க்கு அவற்றின் துன்பம் துடைக்க எண்ணம் உண்டாயிற்று. எனவே தம்முடைய உடலை மறைவான இடத்தில் கிடத்திவிட்டு, கூடு விட்டு கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை அந்த இடையனது உடம்பினுள் புகுமாறு செலுத்தித் திருமூலராய் எழுந்தார்.
மூலன் எழுந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ந்து அன்பினால் அவரது உடலினை நக்கி, மோந்து, களிப்போடு துள்ளிக் குதித்தன. திருமூலர் மனம் மகிழ்ந்து பசுக்களை நன்றாக மேய்த்தருளினார். வயிரார மேய்ந்த அப்பசுக்கள் காவிரியாற்றின் துறையிலே இறங்கி தண்ணீர் பருகி கரையேறி சாத்தனூரை நோக்கி நடந்தன. அவற்றைத் தொடர்ந்து சென்ற சிவயோகியார் பசுக்கள் தத்தம் வீடுகளுக்குச் சென்றதைக் கண்டார். அதே சமயம் வீட்டிலிருந்து வெளியே வந்த மூலனின் மனைவி, மூலன் வடிவிலிருந்த சிவயோகியரை வீட்டிற்கு அழைத்தாள். திருமூலரோ தான் அவளுடைய கணவன் அல்லன் என்றும், அவன் இறந்துவிட்டான் என்றும் கூறினார். அவள் அவ்வூர்ப் பெரியவர்களிடம் முறையிடவும், மூலர் தான் ஏற்றிருந்த உடலிலிருந்து விலகி தன் ஒரு சிவயோகியார் என்பதை நிருபித்தார். மறுபடியும் மூலனின் உடம்பில் புகுந்தார். இதைக்கண்ட சான்றோர்கள் மூலனின் மனைவியைத் தேற்றி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர்.

சிவயோகியர் தன் உடலைத் தேடிச் சென்று அது கிடைக்காததால் மூலனின் உடலிலேயே தங்கி திருவாவடுதுறைத் திருக்கோவிலை அடைந்தார். யோகத்தில் வீற்ற்ருந்து, நன்னெறிகளை விளக்கும் ‘திருமந்திரம்’ எனும் நூலை ஓராண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடியருளினார். இவரது வரலாற்றை சேக்கிழாரடிகள் பெரியபுராணத்தில் விரிவாகக் கூறியுள்ளார்.


நாமும் பிறகு பெரியபுராணத்தின் துணையுடன் இவரின் அருள் வரலாற்றை விரிவாக சிந்திப்போம்

NOTE: திருமந்திரம் திருமூலர் எழுதியது இதனைப் பற்றி பல ஆராய்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அடியார்கள் அப்படி ஏதேனும் செய்து இருந்தால் என்னுடன் பகிர்ந்து என்னுடைய ஆராய்ச்சிக்கும் உதவுமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்

திருச்சிற்றம்பலம்
சிவாயநம

படம் நந்தி தேவர் மற்றும் அவர்களின் சீடர்களினைப் பற்றி குறிப்பிட்டுள்ளது.

செய்தியிலோ அல்லது படத்திலோ குறை இருப்பின் அதனை அடியார் பெருமக்கள் சுட்டிகாட்ட வேண்டுகின்றேன்

திருச்சிற்றம்பலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக